Saturday, November 5, 2011

Outliers_50_Nanyam Vikatan

அவுட்லயர்ஸ் (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 50

என் பாட்டிக்கு தனது மகள்களை ஜமைக்காவை விட்டு வெளியே அனுப்பி பிரமாதமாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற உந்துதலும், தீர்க்க தரிசனமும் வேறெங்கிருந்தும் வரவில்லை... அவர் இந்த அனுகூலமான மரபுரிமை என்கிற பாரம்பரியத்தில் வந்தவர். அவருடைய மூத்த சகோதரர் ருஃபூஸ் ஒரு ஆசிரியர். இன்னொரு சகோதரர் கார்லோஸ் கியூபாவிற்குச் சென்று, பிறகு அங்கிருந்து ஜமைக்காவுக்கே வந்து ஒரு கார்மென்ட் தொழிற்சாலையை நிறுவினார். என் அப்பாவின் தந்தையான சார்லஸ் ஃபோர்ட் ஒரு மொத்த வியாபாரி. அவருடைய அம்மாவும்கூட நன்கு படித்தவர். பணக்கார 'கலர்டு’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

என்னுடைய பாட்டி மிகவும் தனிச்சிறப்பு மிக்க சிந்தனைகள் கொண்டவர் என்று சொல்லியிருந்தேன். இதில் முக்கியமாக நினைவு கூறத்தக்கது என்னவெனில், ஃபோர்ட் குடும்பத்தினர் அதுவரை அடைந்து வந்த நிலையான வளர்ச்சி. இதன் ஆரம்பம் என்னவோ ஒழுக்க வரையறைகளை மீறக்கூடிய மிகவும் சிக்கலான விஷயத்திலிருந்துதான் ஆரம்பித்தது. அதாவது, என்னுடைய அம்மாவின் கொள்ளு தாத்தாவான வில்லியம் ஃபோர்ட் தன் துணையை - அதாவது என் கொள்ளுப் பாட்டியை அடிமைகள் சந்தையில் அலிகேட்டர் பாண்ட்டில் வாங்கினார்.
இந்த மாதிரி விருப்பப்பட்டு விலைக்கு வராத அடிமைகளின் வாழ்க்கை சந்தோஷம் அற்றதாக இருந்தது. ஜமைக்காவில் இருந்த தோட்ட முதலாளிகள் தங்களுடைய 'மனிதச் சொத்தான’ அடிமைகளிடம் எவ்வளவு தூரம் வேலை வாங்க முடியுமோ வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு வயதான பிறகு அல்லது அவர்கள் இறந்த பிறகு இன்னொரு சுற்று அடிமைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த அடிமைகள் மூலம் பெற்ற குழந்தைகளுடன் கொஞ்சி கும்மாளம் போடும் அதே நேரம், அந்த அடிமையை தனது சொத்தாகப் பாவிப்பது பற்றி அவர்கள் துளியளவும் கவலைப்படவில்லை.

திஸ்ஸிவுட் என்கிற (தனது பாலியல் விவகாரங்களை டயரி யில் குறித்து வைத்திருந்தவர்) தோட்ட முதலாளி தனது வாழ்நாள் முழுவதும் ஃபிபா என்கிற அடிமையுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் அவளை மிகவும் நல்ல நிலையில் வைத்திருந்தார். அவள் மூலம் அவருக்கு ஒரு மகன் உண்டு. ஆனால், அவர் தோட்டத்தில் வேலை பார்க்கும் மற்ற அடிமைகளைப் பொறுத்தவரை அவர் ஒரு 'மான்ஸ்டர்’... அதாவது, மிருகம் போன்றவர். அவரை விட்டுவிட்டு ஓட நினைப்பவர்களுக்கு அவர் கொடுக்கும் தண்டனைக்குப் பெயர் 'டெர்பி டோஸ்’. ஓட முயற்சிப்பவர்களை நன்கு அடித்து, அந்தப் புண்களில் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, மிளகுத்தூள் போன்றவற்றை நன்கு தேய்த்தெடுப்பார்கள். வேறொரு அடிமையின் கழிவை, ஓடிப் போக முயற்சித்த அடிமையின் வாயில் ஊற்றச் சொல்லி ரசிப்பார்கள். கழிவு ஊற்றப்பட்ட வாயை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு கட்டுப் போட்டு மூடிவிடுவார்கள்.

இதனால், கோதுமை நிறத்தினர் தங்களை அதிகார பலம் மிக்கவர்களாகவும், இதுபோன்ற கொடுமைகள் இல்லாமல் வாழக்கூடிய சந்தோஷத்தை அனுபவிப்பவர் களாகவும் இருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. இது அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. அவர்கள் ஒவ்வொருவருடைய தோலின் நிறத்தை வைத்துக் கொண்டு கொடூரமாக வெள்ளையர்களைப் போல விளையாடினார்கள். 'ஒரே குடும்பத்தில் பல நிறத்தை உடையவர்கள் இருந்ததும் உண்டு. இது அங்கே சாதாரணமாக பெரும்பாலான குடும்பங்களில் காணப்பட்டது. அவர்களுடைய நிலை பற்றி சமூகவியலாளர் ஃபெர்னாண்டோ ஹென்றிக்ஸ் என்பவர்,
''மிகவும் 'லைட்’ கலர் கொண்டவர்களுக்குத் தனிச் சலுகைகள் கிடைத்தன. அவர்களின் இளமைக் காலம் அல்லது திருமணம் ஆகும் வரை 'லைட் கலர்’ கொண்டவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வந்தால் 'டார்க்’ கலர் கொண்டவர்களை அந்த சந்தர்ப்பங்களில் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. 'லைட் கலர்’ கொண்ட குழந்தைதான் அந்த குடும்பத்தின் கலர் என்று பிரகடனப்படுத்தபட்டார்கள். இதன் மூலம் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குக் குறுக்காக எதையும் வர அனுமதிப்பதில்லை.

'லைட் கலர்’ கொண்ட குடும்பத்தினர் தங்களுடைய 'டார்க் கலர்’ கொண்ட உறவினர்களின் தொடர்பை துண்டிக்கவும்கூட தயங்குவதில்லை... அதுபோல 'டார்க் கலர்’ கொண்ட நீக்ரோ குடும்பத்தினர், தங்களிலேயே கொஞ்சம் வெளுப்பாக இருப்பவர்கள் போய், வெள்ளையர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதை ஊக்குவித்தனர். இந்த மாதிரி நிறத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்பத்திற்குள் ஏற்பட்ட உறவுமுறைகளே பின்பு பொது வாழ்விலும் வெளிப்படத் தொடங்கியது'' என்கிறார்.

எனது குடும்பம் இதற்கெல் லாம் பழக்கப்பட்டதில்லை. டெய்ஸி தன்னைவிட தனது கணவர் 'லைட் கலர்’ என்பதில் பெருமிதம் கொண்டவர். 'டெய்ஸி நல்லவள்தான். ஆனால், கொஞ்சம் கறுப்பு'’ என அவருடைய மாமியார் அவரைப் பற்றி கிண்டலாகச் சொல்வாராம்.

எனது அம்மா வழி உறவில் ஒருவர் உண்டு. அவரை நான் ஜோன் அத்தை என அழைப்பேன். அவர் 'ஒயிட் லைட்’ நிற வகையைச் சேர்ந்தவர். ஆனால், அவருடைய கணவர் ஜமைக்காவில் 'இன் ஜூன்’ என அழைக்கப்படும் கறுப்பு நிறமும், நீளமாகவும் நேராகவும் வளர்ந்து நிற்கும் முடியையும் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவர்களுடைய மகள்களும் அப்பாவைப் போலவே கறுப்பு. அவர் இறந்த பிறகு ஒருநாள் அத்தை ஜோன் தனது மகளைப் பார்ப்பதற்காக ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த 'லைட் கலர்’ தோலைக் கொண்ட ஒருவரின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

அது மிகவும் கேவலமான ஒன்று... என் அத்தை ரயிலிலிருந்து இறங்கும்போது அந்த 'லைட் கலர்’ ஆசாமியும் பின்னாடியே இறங்கியிருக்கிறார். உடனே அத்தை தனக்காக அங்கே காத்திருந்த தனது மகளைப் பார்த்தும் பார்க்காதது போல்... யாரோ போல மெள்ள நகர்ந்து சென்றுவிட்டார். காரணம், தனது மகள் இவ்வளவு கறுப்பாக இருக்கிறாள் என்று தன்னுடன் பயணம் செய்த அந்த யாரோ ஒருவருக்கு தெரியக் கூடாதாம்!

1960-ம் ஆண்டு என்னுடைய அம்மா தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். அதன் பெயர், 'பிரௌன் ஃபேஸ், பிக் மாஸ்டர்'! இதில் பிரௌன் ஃபேஸ் என்பது அவரையும், பிக் மாஸ்டர் என்பது ஜமைக்கன் பேச்சு வழக்குப்படி கடவுளையும் குறிப்பதாகும். திருமணத்திற்குப் பிறகு லண்டனில் வசித்து வந்த எனது பெற்றோர் தங்குவதற்காக அபார்ட்மென்ட் தேடியிருக்கிறார்கள். அப்போது நான் பிறக்கவில்லை.
எனது மூத்த சகோதரர் குழந்தையாக இருந்தார். கடைசியாக என் அப்பா ஒரு நல்ல அபார்ட்மென்டை பார்த்து குடியேறிய இரண்டாவது நாளில் அந்த வீட்டுக்காரப் பெண்மணி என் அப்பாவிடம், ''நீங்கள் ஏன் உங்கள் மனைவி ஜமைக்காவைச் சேர்ந்தவர் என முதலிலேயே சொல்லவில்லை? வீட்டை உடனே காலி செய்யுங்கள்'' என கோபாவேசத்துடன் கூறியதாக அம்மா அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அம்மா தனது புத்தகத்தில் இந்த மாதிரியான அவமானங்களுக்கு அர்த்தம் என்னவென்று கண்டுபிடிக்க போராடியிருக்கிறார். இறுதியில் அவர் 'இதுதான் நடைமுறை' என்று ஒப்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'கலர்டு’ ஜமைக்கன்கள் தலைமுறை, தலைமுறையாக இந்த நிற வேற்றுமையினால் நன்மை அடைந்திருக்கிறார்கள். எனவே, அவர் இன்னொருவரிடம் போய், 'தோலின் நிறத்தை வைத்து வேற்றுமைப்படுத்திப் பார்க்காதீர்கள்' என்று கடிந்து கொள்ள முடியாது.
நாம் எங்கிருந்து வந்தோம் என்கிற உண்மையைச் சொல்லிக் கொள்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல. பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து வெற்றி பெற்ற அம்மா தன்னை அந்த மாதிரி காட்டிக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை.

அதாவது, ஜோ ஃபுளோமைப் பார்த்து மிகச் சிறந்த வக்கீல் என்று சொல்வதுபோல, அவருடைய தனிப்பட்ட சாதனைகள் அவருடைய இனம், தலைமுறை, கார்மென்ட் தொழில் மற்றும் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த சட்ட நிறுவனங்களுக்கு உண்டான சிறப்புத் தகுதிகள் ஆகியவற்றுடன் நினைக்க முடியாத அளவிற்கு பின்னிப் பினைந்து இருந்தாலும் கூட!

சூப்பர் ஸ்டார் வக்கீல்களாக இருக்கட்டும், கணித மேதைகளாகட்டும், மென்பொருள் தொழில் முனைவோர்களாகட்டும்... அவர்கள் இது தங்களுக்கு இயல்பாகவே அமைந்த வெற்றி என்று கூறுவார்கள். ஆனால், அது அப்படியல்ல என்பதே உண்மை. அவர்கள் எல்லோரும் வரலாறு மற்றும் சமூகம், வாய்ப்புகள் மற்றும் மரபுரிமை போன்றவற்றின் சாதகங்களையும் சேர்த்தே எடுத்து கொண்டு மற்றவர் களைவிட வேகமாக வளர்ந்தவர் கள்! இவர்களுடைய வெற்றி அதிசயமானதோ, மர்மமானதோ இல்லை. இவர்களுடைய வெற்றிக்குக் காரணம் சாதகமான சூழ்நிலை கள் மற்றும் பாரம்பரியம்.
சிலர் இந்த வெற்றிக்கு தகுதி படைத்தவர்களாக தங்களை ஆக்கிக் கொண்டார்கள். சிலர் அந்த சூழ்நிலைகள் அமைந்தும் கோட்டைவிட்டார்கள். சிலர் கடினமாக உழைத்தவர்கள், சிலருக்கு அதிர்ஷ்டம் வாய்த்தது. ஆனால், இவை யெல்லாம் அவர்கள் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையை அடைய உதவிய காரணிகள் என்பதை மறுக்கவே முடியாது.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது 'அவுட்லயர்’கள் எல்லாம் 'அவுட்லயர்’களே அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்..

என்னுடைய பாட்டிக்கு பாட்டி அலிகேட்டர் பாண்ட்டில் அடிமையாக வாங்கப்பட்டவர். இதனால் அவருடைய மகன் ஜானுக்கு அவருடைய நிறத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. அதுவே அன்றைய காலகட்டத்தில் அவருக்கு அனுகூலமாக அமைந்தது. இதனால் அவர் அடிமை வேலை செய்யும் வாழ்க்கையிலிருந்து தப்பித்தார்.

டெய்ஸி ஃபோர்ட் என்கிற என் பாட்டி பின்பற்றிய 'முடியும்’ என்கிற கலாசாரக் கோட்பாடு அவருடைய மகள்களின் சார்பாக செயலாற்ற உதவியது. அதுபோல எனது அம்மாவின் படிப்பிற்குக் காரணம் மேக் மில்லனின் எச்சரிக்கையும், 1937-ல் ஏற்பட்ட கலகமும், மிஸ்டர் சான்ஸ் மூலமாக கிடைத்த பண உதவியும்தான்.

இவையெல்லாம் சரித்திரத் தின் நிகழ்வுகள்; எனது குடும்பத்திற்குக் கொடுத்த பரிசுகள். பல சரக்குக் கடைக்காரரிடமிருந்த வளமும், கலகத்தினால் ஏற்பட்ட பலனும், முடியும் என்கிற கலாசாரம் தழுவிய வாழ்வும், தோல் நிறத்தினால் ஏற்பட்ட அனுகூலமும் என் பெற்றோரின் வளர்ச்சி மூலமாக எனக்குக் கிடைத்தது போல மற்றவர்களுக்கும் கிடைத்திருந்தால்... இன்னும் எத்தனைபேர் முழுமையான வாழ்வைப் பெற்று இன்றைக்குக் குன்றின் மீது அழகான ஒரு வீடு கட்டிக் கொண்டு சந்தோஷம் பொங்க வசித்துக் கொண்டிருப்பார்கள்!

(நிறைந்தது)



0 comments: