Saturday, July 9, 2011

Outliers in Tamil_Nanayam Vikatan

அவுட்லயர்ஸ்
 
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 33

 

1997 ஆகஸ்ட் 5-ம் தேதி காலை நேரம்...

கொரிய விமானம் 801-ன் கேப்டன் ஆறு மணிக்கு எழுந்தார். பின்னாளில் அவருடைய குடும்பத்தினரை விசாரித்தபோது அவர்கள் கூறியது:
''வர் ஒரு மணி நேரம் ஜிம்மிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபின் அன்றைய மாலையில் குவாம் பயணத்திற்கான விமான திட்டத்தைப் படித்தார். அதற்குப் பிறகு அவர் சிறிது நேரம் தூங்கி எழுந்தபிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சியோலுக்கு ஒரு மூன்று மணிக்குபோல புறப்பட்டார்!''
அவருடைய மனைவி குறிப்பிடும்போது, ''கிம்போ இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தன்னை தயார் செய்து கொள்வதற்காக அவர் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி விட்டதாக''க் கூறினார். அவர் கொரியன் ஏர்ஃபோர்ஸிலிருந்து வந்த பிறகு, கொரியன் ஏரில் விமானியாக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். அவர் 8,900 மணி நேரம் விமானம் ஓட்டி அனுபவம் பெற்றவர். இதில் 3,200 மணிநேரம் ஜம்போ ஜெட் ஓட்டிய அனுபவமும் அடக்கம். சில மாதங்களுக்கு முன்பு அவர் வேலை பார்த்து வரும் விமான நிறுவனம், அவர் குறைந்த உயரத்தில் ஜம்போ ஜெட் என்ஜினை மிகவும் பாதுகாப்பாக கையாண்டதற்காக 'விமான பாதுகாப்பு விருதுவழங்கி கௌரவித்தது. அவருக்கு வயது 42. மிகவும் ஆரோக்கியமாக இருந்து வந்தவருக்கு பத்து நாட்களுக்கு முன்புதான் மார்புச்சளி இருப்பதாகக் கண்டறியப்பட்டது'' என்று கூறினார்.
இரவு 7 மணிக்கு கேப்டன், அவருடைய முதன்மை அதிகாரி மற்றும் விமான என்ஜினீயர் ஆகிய மூவரும் அன்று மேற்கொள்ள வேண்டிய பயணத்திற்கான பேப்பர்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் ஓட்டிச் செல்லவிருந்த விமானம், விமான உலகில் 'கிளாசிக்என அறியப்பட்ட போயிங் 747. விமானம் மிகவும் பக்காவாக இருந்தது. இந்த விமானம் ஒரு காலத்தில் கொரியன் ஜனாதிபதி பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. விமானம் 801 இரவு பத்து முப்பது மணிக்கு புறப்பட்டு
20 நிமிடத்தில் வானத்தை எட்டியது. அது டேக்ஆஃப் ஆன சமயத்தில் எந்தவித மாறுபாடான சம்பவமும் நிகழவில்லை. அதிகாலை 1 மணி 30 நிமிடத்திற்குக் கொஞ்சம் முன்னதாக விமானம் மேகமூட்டத்திலிருந்து வெளியே வந்தது. விமான சிப்பந்திகள் தூரத்தில் வெளிச்சம் எதுவும் இல்லாததைப் பார்த்தனர்.  

'இது குவாம்தானா?' விமான என்ஜினீயர் கேட்டார். சிறிது மௌனத்திற்குப் பிறகு அவரே, 'ம்... இது குவாம்தான், குவாம்தான்' என்றார். கேப்டன் நகைப்புடன், ''நல்லது'’ என்றார்!
முதன்மை அதிகாரி, ஏர் டிராஃபிக் கன்ட்ரோலுடன் தொடர்பு கொண்டு, விமானம் 'சார்லி ப்ரேவோமேகமூட்டத்திலிருந்து வெளிவந்து விட்டது என்றும், விமானம் இடதுபக்கம் ரன்வே 6-ல் இறங்குவதற்கு 'ராடார் வெக்டார்தரும்படியும் வேண்டிக் கொண்டார்.
விமானம் குவாம் ஏர்போர்ட்டில் இறங்க ஆரம்பித்தது. இறங்குவதை நன்கு பார்க்க முடிகிறது என்று கேப்டன் கூறினார். இதற்கு முன்பு அவர் கிம்போவிலிருந்து எட்டுமுறை குவாமிற்கு விமானம் ஓட்டியிருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பாககூட அவர் இந்த வழியில் பயணித்திருக்கிறார்.
விமானம் இறங்குவதற்கான கியர் இயக்கப்பட்டது. இறக்கைகள் பத்து டிகிரிக்கு விரிவாக்கப்பட்டது. 1 மணி, 41 நிமிடம், 48 வினாடிகளுக்கு கேப்டன் வைபர்களை இயக்குமாறு விமான என்ஜினீயரிடம் கூறினார். அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அவர் ரன்வேயைப் பார்த்தார். ஆனால், கண்களுக்குப் புலப்படவில்லை. ஒரு வினாடிக்குப் பிறகு 'கிரவுண்ட் புராக்ஸிமிட்டி வார்னிங் சிஸ்டத்தின் மின்னணுவியல் குரல்: '500 அடி' என்றது. அதாவது, விமானம் நிலப்பரப்பிலிருந்து 500 அடி உயரத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அவர்களினால் ரன்வேயை பார்க்கவே முடியாதபோது எப்படி 500 அடி உயரம்? இரண்டு வினாடிகள் ஆனது. விமான என்ஜினீயர், ''..?'' என்றார் ஒருவித திகைத்த குரலில்.  
1 மணி 42 நிமிடம் 19 வினாடிகள்... முதன்மை அதிகாரி, ''நாம் மிஸ்ட் அப்ரோச்சை கையாளுவோம்'' என்றார். இதன் அர்த்தம், திரும்பவும் விமானத்தை மேலெழுப்பி ஒரு பெரிய வட்டம் போட்டுவிட்டு மீண்டும் தரையிறக்குவது.  
ஒரு வினாடிக்குப் பிறகு, விமான என்ஜினீயர், 'ரன்வே தெரிய வில்லை' என்றார். முதன்மை அதிகாரி, 'ரன்வே தெரியவில்லை... மிஸ்ட் அப்ரோச்' என்றார்.  
1:42:22... விமான என்ஜினீயர் 'மீண்டும் ஒருமுறை சுற்றுங்கள்' என்றார்.
1:42:23, கேப்டன், ''இன்னொரு முறை சுற்றுங்கள்' என்று கூறியபடியே விமானத்தை இறக்குவதிலிருந்து மெதுவாக இழுத்தார்.  
1:42:26... விமானம், விமான நிலையத்திலிருந்து தென் மேற்கில்
3 மைல் தொலைவில் உள்ள மிகவும் அடர்த்தியான நிமிட்ஷ் மலையின் மீது பக்கவாட்டில் மோதியது. 60 மில்லியன் டாலர் மதிப்பும் 212,000 கிலோ கிராம் எடையும் கொண்ட விமானம் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் மணிக்கு நூறு மைல் வேகத்தில் சிராய்த்து 2,000 அடிகள் வழுக்கி சென்று எண்ணெய் பைப்புகளையும், பைன் மரங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து தீக்கிரையானது. மீட்புப் பணியினர் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே 254 பயணிகளில் 228 பேர் இறந்து போயிருந்தனர்.  
இதற்கு இரண்டு வருடங் களுக்குப் பிறகு கொரியன் ஏர் போயிங் 747 சியோலில் விபத்துக் குள்ளானது. இரண்டு வருடத்தில் இரண்டு விபத்துக்கள் என்பது நல்ல அடையாளமே இல்லை. குவாம் விபத்து நடந்து ஏறக்குறைய ஒரு வருடத்தில் கொரியன் ஏர் 747 சியோலில் உள்ள கிம்போவில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இன்னொரு விமானம் கொரியாவின் உல்சான் ஏர்போர்ட்டில் ரன்வேயைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இதற்குப் பிறகு மார்ச் மாதத்தில் கொரியாவினுடைய ஏர் மெக்டொனால் டக்ளஸ் 83 போகாங்க் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இது நடந்து முடிந்த ஒரு மாதத்திற்குள் கொரியன் ஏரைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஷாங்காயில் உள்ள குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இன்னும் ஒருமாதம் கழித்து, கொரியன் ஏரைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது!
இந்தமாதிரி விபரீதம் நிகழக்கூடும் என 14 முறைகள் எச்சரிக்கை சமிஞ்ஞைகள் காக்பிட்டிற்கு அனுப்பிய பிறகும் இது நடந்தது!  1999 ஏப்ரல் மாதம் டெல்டா ஏர்லைன்ஸும், ஏர் பிரான்சும் கொரியன் ஏருடன் கூடிய தங்களது உறவை முறித்துக் கொண்டது. அவ்வளவு ஏன்.... தென் கொரியாவில் அமெரிக்க ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இருந்தனர். ஒரு சிறிய உத்தரவின் மூலம் யு.எஸ். ராணுவம் தனது நாட்டு படைவீரர்கள் யாரும் கொரியன் ஏரில் பயணம் செய்யக்கூடாது என தடை விதித்தது. யு.எஸ். ஃபெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டியினால்  தென் கொரியாவிற்கான பாதுகாப்பு குறியீடு (மதிப்பெண்) குறைக்கப்பட்டது. கனடா நாட்டு அதிகாரிகளும் கொரியன் ஏருக்கென்று தங்கள் நாட்டில் அளிக்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யப் போவதாகக் கூறினர்.  
இந்த விவாதங்களுக்கு இடையில், வெளியரு அமைப்பு செய்த தணிக்கை விவரம் 'லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தில் பயணிக்கக்கூடிய அலுவலர்கள் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பக்கூடிய நேரத்திலும், சரக்குகள் உள்ள இடத்திலும் நின்று புகைப்பிடித்ததாகவும், விமானம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது அவர்கள் சுவாரஸ்யமாக பத்திரிகை படித்துக் கொண்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அவர்கள் பத்திரிகை படிக்கும்போது எச்சரிகை லைட் எரிந்தாலும் கூட அதை அவர்கள் பார்க்க முடியாதபடி பத்திரிகையை உயர்த்திப் பிடித்திருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. அலுவலகர்களிடையே நிலவிய உற்சாகமற்ற தன்மையும், பல விதிமுறை மீறல்கள் நடந்ததையும் 747 'கிளாசிக்கிற்கான பயிற்சியின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இப்படி ஒரு விபத்து ஷாங்காயில் நடந்தபோது கொரிய நாட்டு ஜனாதிபதி கிம் டேஜங் இவ்விபத்துக்கள் குறித்து பேசும்படியான ஒரு கட்டாயத்திற்கு உள்ளானார். ''கொரிய விமான விபத்துக்கள் ஒரு தனிப்பட்ட நிறுவனம் மட்டும் சார்ந்த பிரச்னையில்லை. இது ஒரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம். நமது நாட்டின் நம்பகத்தன்மையையே இது கேள்விக்குறியதாக மாற்றக் கூடியது' என்றும் கூறினார். இதற்குப் பிறகு டேஜங், ஜனாதிபதி பயணிக்கக்கூடிய விமானத்தை கொரியன் ஏரிலிருந்து அதன் போட்டியாளரான ஏசியானாவிற்கு மாற்றினார்!  
இதற்குப் பிறகு சில காலத்தில் யாராலும் நம்ப முடியாத ஓர் அற்புதம் நடந்தது. கொரியன் ஏர் புதிய வடிவம் எடுத்தது. இன்றைக்கு கொரியன் ஏர்லைன் சிறந்த மற்றும் தரம் வாய்ந்த விமானங்களின் அமைப்பான 'ஸ்கைடீம்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம். 1999-லிருந்து இதனுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்தவித களங்கமும் இல்லை. இதன் தலைகீழ் மாற்றத்தைக் கருதி 'ஏர் டிரான்ஸ்போர்ட் வேர்ல்ட்என்கிற அமைப்பு பீனிக்ஸ் விருது வழங்கி சிறப்பித்தது.
இந்த அத்தியாயத்தில் நாம் விபத்துக்கள் குறித்து அலசி ஆராய  இருக்கிறோம். இப்படி நாம் அலசப் போவதற்குக் காரணம், மோசமான நிலைமையில் இருந்த ஒரு விமான நிறுவனம் 'அவுட்லயர்ஆக, உலகத்திலேயே மிகவும் சிறந்த விமான சேவையாக எப்படி மாறியது என்பதைத் துல்லியமாகக் கணிப்பதுதான்.

0 comments: